நாம் இந்த உலகில் எதற்கு பிறந்தோம் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கக்கூடும்?
சாதிக்க பிறந்திருக்கோம் அல்லது அனைவரையும் நேசிக்க பிறந்திருக்கோம் என்று இந்த இரண்டு பதில்கள் மட்டுமே நம் மனதில் உலாவக்கூடும்.
நவீனமயம் என்று சொல்லிக்கக்கூடிய இந்த உலகில், மக்கள் உணர்வுகளுக்கு நேரம் ஒதுக்க தயாராக இல்லை என்பதே இன்றைய அபத்தமான நிலை. ஏன் நானும் கூட அப்படிதான். ஆனால் யோசித்துப்பாருங்களேன்!
நாம் இன்று ஒரு இலட்சியத்தை அடைய ஓடுகிறோம். ஓடுகிறோம் ...... ஓடிக்கொண்டே தான் இருக்கின்றோம் . ஆனால் அதே சமயத்தில் சரியான பாதையில் தான் ஓடுகிறோமா? அப்படியே வேகமாக ஓடி வெற்றியை கண்டாலும் அதை யாருடன் பகிர்ந்துகொள்வது ? அப்படி பகிர்ந்துகொள்ள யாருமில்லை என்றால் அந்த வெற்றியை அடைய நீங்கள் அதிக சுயநலத்துடனே விளங்கியிருக்கக்கூடும். சரிதானே ? அப்போது உறவுகளைப்பற்றி உங்களின் புரிதல் என்ன?
இதை சற்று நேரம் யோசித்தது உண்டா?
உதாரணத்திற்கு திருமண உறவு.. 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்று சொல்லுவார்கள். இங்கு சொர்க்கம் என்று எதை மேற்கோள் காட்டுகிறார்கள் எனில், ஆணும் பெண்ணும் ஒன்றிணைவது விதியின் கையில் அதானே.. ஆக, இது முழுமையாக இரு மனங்களை சேர்ந்தது என்று தானே பொருள். அப்படி இருக்கக்கூடுமெனில் இங்கு பெரியவர்கள் முன்னிலையில், நடக்கும் நாடகம் என்னவாக இருக்கிறது என்று யோசியுங்கள். இது வேலியே பயிரை மேய்ந்த கதையல்லவா! பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்வது எவ்வுளவு அபத்தமானதோ அதை விட இருமனங்களின் சம்மதமில்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதும் தான்.
இப்படி உணர்வு என்பது தன்னையும், தன் நலத்திற்கு சாதகமாக யோசிக்கும் சுற்றியுள்ள சுற்றங்களை சேர்ந்ததாக தான் விளங்குகிறது. சரி, இப்போது யாரும் எந்த இலட்சியமும் வைக்க கூடாதுனு சொல்றீங்களா?
நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்கள் இலட்சியத்தை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட உங்களின் வாழ்க்கை உறவுகளின் உணர்வை மதிப்பது முக்கியமானது, கடமையானதும் கூட...
நான் லட்சிய பாதையை நோக்கி ஓட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே சமயம் லட்சிய பாதையில் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் மலர்களின் நறுமணத்தை சுவாசிக்கவும், அதன் இயல்பை உணரவும் மறந்து விடாதீர்கள். தவறி விட்டால், நீங்கள் சேரும் பாதை பாலையாகவே இருக்கும், எங்கேயாவது குறும் தண்ணீர் குட்டைகளுடன்...
உங்கள் திரைக்கவிஞன்..