தற்போதைய காலகட்டத்தில் பேய் படம் ட்ரெண்டில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த வரிசையில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து இருக்கிறது பலூன் திரைப்படம்.
பொதுவாக பேய் படம் என்றால் ஒரு வீடு, அதில் இருக்கும் பேய், அதுக்கு ஒரு முன்கதை, அந்த வீட்டுக்கு குடிவரும் வரும் கதாபாத்திரங்கள் , அதை சுற்றி நடக்கும் அமானுஷ்யங்களை குறித்து இருக்கும். இதுவும் அவ்வகையான ஒன்றே.
இருந்தாலும் காஞ்சனா போன்ற படங்களை நோக்கினால் ஒரு சமூக கருத்தினை எடுத்து வைக்கும். அது போன்ற பேய் படங்கள் மிகவும் குறைந்தவையே. அந்த வரிசையில் பலூன் திரைப்படம் தன் காலை ஊன்றி இருக்கிறது.
இந்த படத்தின் கதாநாயகன் ஜெய்யாக இருந்தாலும், திரைக்கு பின்னால் ஒலியமைக்கும் இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் படத்தின் நாயகன். பின்னணி இசையின் ஓராமகவே கதை நகர்கிறது. படத்தின் முதுகெலும்பாக யுவன் நிற்கிறார்.
படத்தின் இயக்குநர் சினிஷ் , திரை கலைஞர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார் என்று தெரிகிறது. படத்தின் கதையை யூகிக்க முடிந்தாலும் நேர்த்தியான திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்ககிறார்.
படத்தில் வசனங்கள் அனைத்தும் கதைக்கேற்ப அமைத்துள்ளனர். அதில், "வெற்றி அடையும் முன்னால் செவியை அடக்கு, அடைந்த பின்னால் வாயை அடக்கு" என்ற வசனம் கைதட்டல்களை வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.
பேய் படம் என்றால் முக்கியமான அம்சம் ஒலி அமைப்பு மற்றும் ஒலி சேர்க்கை. அதிலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணிகளை திகில்கள் கிளம்பும் வண்ணம் அமைத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சரவணன் சில இடங்களில் தனித்துவத்தை காட்டியுள்ளார். இருந்தாலும் பெட் ரூம் காட்சிகளில் வரும் ஒளியில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. முன்கதையில் வரும் வின்டேஜ் லுக் (vintage look) கதையோடு ஒன்றிணைய உதவியது.
படத்தொகுப்பாளர் ரூபன் தேவைக்கேற்ப படத்தை தொகுத்துள்ளார். இரண்டாம் பகுதியில் முன்ஜென்ம கதை ஆரம்பிக்க முன் வரையில் கொஞ்சம் அதிக பகுதி இருந்தால் கொஞ்சம் சலிப்புதட்டும் தன்மையை கொண்டு வருகிறது. அதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.
யோகி பாபு, இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் மெதுவாக போயிருக்கும். கதை மெதுவாக நகரும் நேரத்தில் யோகி பாபு தன் நகைச்சுவையின் மூலம் கதையை சூடு புடிக்க வைக்கிறார்.
அஞ்சலி ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஜனனி , கொஞ்சமான திரை பகுதியில் வந்தாலும் தன் பகுதியை அசத்திவிடுகிறார்.
ஜெய் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுள்ளார். சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு இருப்பது திரையில் தெரிகிறது. ஜாதியின் காரணமாக கொலை செய்யப்பட்ட இருவரின் ஆன்மா , கொன்றவனை கொல்ல துடிக்கும் கதையிது.
மொத்தத்தில், பழிவாங்கும் கதையாக இருந்தாலும், கதாநாயகன் வில்லனை கொல்லுவதற்கு சமூக நோக்கமுடைய காரணமும் உள்ளது என்று கூறுவது தான் பலூன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக