Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

பலூன் திரை விமர்சனம் !

தற்போதைய காலகட்டத்தில் பேய் படம் ட்ரெண்டில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த வரிசையில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து இருக்கிறது பலூன் திரைப்படம்.

பொதுவாக பேய் படம் என்றால் ஒரு வீடு, அதில் இருக்கும் பேய், அதுக்கு ஒரு முன்கதை, அந்த வீட்டுக்கு குடிவரும் வரும் கதாபாத்திரங்கள் , அதை சுற்றி நடக்கும் அமானுஷ்யங்களை குறித்து இருக்கும். இதுவும் அவ்வகையான ஒன்றே. 

இருந்தாலும் காஞ்சனா போன்ற படங்களை நோக்கினால் ஒரு சமூக கருத்தினை எடுத்து வைக்கும். அது போன்ற பேய் படங்கள் மிகவும் குறைந்தவையே. அந்த வரிசையில் பலூன் திரைப்படம் தன் காலை ஊன்றி இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகன் ஜெய்யாக இருந்தாலும், திரைக்கு பின்னால் ஒலியமைக்கும் இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் படத்தின் நாயகன். பின்னணி இசையின் ஓராமகவே கதை நகர்கிறது. படத்தின் முதுகெலும்பாக யுவன் நிற்கிறார்.

படத்தின் இயக்குநர் சினிஷ் , திரை கலைஞர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார் என்று தெரிகிறது. படத்தின் கதையை யூகிக்க முடிந்தாலும் நேர்த்தியான திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்ககிறார்.

படத்தில் வசனங்கள் அனைத்தும் கதைக்கேற்ப அமைத்துள்ளனர். அதில், "வெற்றி அடையும் முன்னால் செவியை அடக்கு, அடைந்த பின்னால் வாயை அடக்கு" என்ற வசனம் கைதட்டல்களை வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.

பேய் படம் என்றால் முக்கியமான அம்சம் ஒலி அமைப்பு மற்றும் ஒலி சேர்க்கை. அதிலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணிகளை திகில்கள் கிளம்பும் வண்ணம் அமைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சரவணன் சில இடங்களில் தனித்துவத்தை காட்டியுள்ளார். இருந்தாலும் பெட் ரூம் காட்சிகளில் வரும் ஒளியில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. முன்கதையில் வரும் வின்டேஜ் லுக் (vintage look) கதையோடு ஒன்றிணைய உதவியது.

படத்தொகுப்பாளர் ரூபன் தேவைக்கேற்ப படத்தை தொகுத்துள்ளார். இரண்டாம் பகுதியில் முன்ஜென்ம கதை ஆரம்பிக்க முன் வரையில் கொஞ்சம் அதிக பகுதி இருந்தால் கொஞ்சம் சலிப்புதட்டும் தன்மையை கொண்டு வருகிறது. அதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.

யோகி பாபு, இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் மெதுவாக போயிருக்கும். கதை மெதுவாக நகரும் நேரத்தில் யோகி பாபு தன் நகைச்சுவையின் மூலம் கதையை சூடு புடிக்க வைக்கிறார்.

அஞ்சலி ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஜனனி , கொஞ்சமான திரை பகுதியில் வந்தாலும் தன் பகுதியை அசத்திவிடுகிறார்.

ஜெய் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுள்ளார். சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு இருப்பது திரையில் தெரிகிறது. ஜாதியின் காரணமாக கொலை செய்யப்பட்ட இருவரின் ஆன்மா , கொன்றவனை கொல்ல துடிக்கும் கதையிது.

மொத்தத்தில், பழிவாங்கும் கதையாக இருந்தாலும், கதாநாயகன் வில்லனை கொல்லுவதற்கு சமூக நோக்கமுடைய காரணமும் உள்ளது என்று கூறுவது தான் பலூன்.


சனி, 30 டிசம்பர், 2017

உள்குத்து திரை விமர்சனம்!

அனைத்து டான் கதைகளில் பார்க்கப்படும் ஒரு கொடிய கதாபாத்திரத்தை எதிர்த்து தன் சொந்த பிரச்னைக்கு போராடும் இளைஞனின் கதையை கூறுவதே உள்குத்து.

ஒருவன் தன்னை ரௌடி என்று சமூகத்தில் அடையாள படுத்திக்கொள்வதில் வெட்கப்படுகிறான். அவ்வாறு ஏன் காசுக்காக மற்றவரை அடித்து, கொன்று சம்பாதிக்க வேண்டும் ? என்ற கேள்வியை எடுத்து வைக்கிறது.

இவ்வகையான திரைப்படங்கள் நிறைய வெளிவந்த போதிலும் இந்தப்படத்தில் சில தனித்துவங்கள் உள்ளன என்று கூறலாம். இது ஆக்ஷன் படம் என்றாலும் இந்த படத்தை கொஞ்சம் சலிப்பூட்டாமல் எடுத்து கொண்டு போவது பால சரவணனின் நகைச்சுவை காட்சிகளே..

இயக்குநர் கார்த்திக் ராஜூ, இந்த கதையை எடுத்துக்கொண்டு தன் திரைக்கதையால் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தியுள்ளார். இருந்தாலும் நடுவில் இரண்டு பாடல் காட்சிகளில் தூக்கம் வந்துவிடுவது மறுக்கமுடியாத உண்மை..

ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பின்னணி நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் காட்சிகளை உயர்த்தி பதிவுசெய்கிறது. ஒளிப்பதிவாளர் R.K. வர்மா கதைக்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளார். ஆனாலும், நிறைய ஹெலிகாப்டர் , ஏரியல் ஷாட் வைத்து இருப்பது போல தோன்றியது.
படத்தை சுருக்கமாக தொகுப்பமைத்த படத்தொகுப்பாளர் பிரவீன் K. L க்கு பாராட்டுக்கள்.

நந்திதா ஸ்வேதா -க்கு திரையில் வரும் வாய்ப்பு கம்மிதான். இதற்கு மேலாக, துணை கதாபாத்திரங்களாக நடித்த ஜான் விஜய் மற்றும் ஸ்ரீ மான் ஆகியோர், தங்களது முத்திரையை பதித்துவிடுகிறார்கள்.

அட்டக்கத்தி தினேஷ் தன் முரட்டுத்தனமாக நடிப்பை மிக எதார்த்தமாக காட்டியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் சில சினிமாதனமான விஷயங்கள் நடந்தாலும் இவர் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவன் அமைதியாக இருப்பதால் அவன் கோழை இல்லை!
ஒருவனை அடித்ததால் கெத்து வராது! தன் குடும்பத்தை காத்தால் தான் வரும் கெத்து! இதை சொல்கிறது உள்குத்து!



வெள்ளி, 29 டிசம்பர், 2017

களவாடிய பொழுதுகள் - திரைவிமர்சனம்

களவாடிய பொழுதுகள் ~ இந்த படத்தில் வரும் நிகழ்வில் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொழுதாவது களவாடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தங்கர் பச்சான் ஒரு தருணத்தில் பல்வேரின் வாழ்க்கையில் பயணித்து வருவது மறுக்க முடியாத உண்மை.. இந்த படத்தை இவ்வளவு இன்னல்களை தாண்டியும் வெளியிட செய்த இயக்குநருக்கு என் பாரட்டுக்கள்..

படத்தின் பல முக்கியமான பொறுப்புகளை தங்கர் பச்சான் சுமந்து செல்கிறார். அதில் ஒளிப்பதிவும் உள்ளடங்கும். சில அழுத்தமான காட்சிகளை வெளிக்கொணர்ந்து , மக்கள் மனதை ஒரு இடத்தில் கதையுடன் ஒன்றிணைய செய்கிறார்.

படத்தில் பல ஆங்கில சொற்களை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் - நெறியாள்கை என்ற பொறுப்பையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். இந்தப்படம் ஒரு குருநாவலில் இருந்து தழுவப்பட்டது என்று அறிந்தேன். அதில் தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தப்படம் கொஞ்சம் மெதுவான திரைக்கதையை கொண்டு நகர்கிறது . பொதுவாக இந்த மாதிரி கதைக்கு இவ்வகை திரைக்கதை தேவை என்றாலும் இந்த காலத்தில் இந்த அளவுக்கு மெதுவாக போகும் திரைக்கதை மக்களுக்கு ஒரு இடத்தில் சலிப்புதட்டும் தன்மையை கொண்டு வருகிறது. 7 வருடங்களுக்கு முன்னமே எடுத்ததால் கூட இந்த செயல் நடந்து இருக்கலாம்.

பரத்வாஜ், இசை நன்றாகவே இந்த படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. என்றாலும், சில இடத்தில் பின்னணி இசை இன்னும் நன்றாக அமைத்து இருக்கலாம் என்று தோன்றியது.

லெனின் செய்த படத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது.. நன்றாக கதையை உணர்ந்து தேவையான அளவு தொகுத்து இருக்கிறார். இவருக்கு தனிப்பாராட்டுகள்..

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கேற்ப எதார்த்தமாக நடித்துள்ளனர். பிரபுதேவாவுக்கு மனைவியாக வரும் கதாபாத்திரம், ஏழ்மையை கண்முன் நிறுத்தியது. கஞ்சா கருப்பு துணை கதாபாத்திரம் திரைக்கதையிலும் துணையாக நிற்கிறது. சத்யராஜ் - பெரியாரை கண்வழி காட்டுகிறார்.

பிரிந்து சென்ற காதலை திரும்ப சந்திக்கும் போது , இருவர்க்கிடையே உண்மையான அன்பு இருந்தும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையே களவாடிய பொழுதுகள்..

வெள்ளி, 22 டிசம்பர், 2017

வேலைக்காரன் - 'தாய்' நாவலின் கிளர்ச்சி !

தொடக்கத்தில் மெதுவாக கதைக்குள் அடியெடுத்து வைத்தாலும்,முதல் பாதி கதையோடு ஒருங்கிணைவதற்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதியில் என்னை அறியாமல் நான் படத்தோடு ஒன்றினேன். அதற்கு முக்கியமான காரணம், இந்த படமானது என்னை மாறியும், உங்களை மாறியும் ஒரு வேலைக்காரனின் கதையாவதால்.... இதுவே, இந்த படத்தின் வெற்றியென கருதுகிறேன்.

இந்தப்படத்தை பார்த்தவுடன் எனக்கு மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்ட தாய் நாவல் ஞாபகத்திற்கு வந்தது.. ஆனால் இது அந்த கதையை குறிக்கிறது என்று சொல்ல வரவில்லை. அந்த நாவலில் பாவெல் எப்படி தன் தாயிடம் தன் கருத்துக்களை கொண்டு அவளை ஈர்க்கிறானோ, அதேபோல அனைத்து வேலைக்காரர்களையும் ஈர்ப்பதே இந்தப்படம்.

இந்த நவீன வாழ்க்கையில் நாம் நம் உழைப்பை மட்டும் நம்பி வாழ்கிறோம். அதற்க்காக எதையும் செய்ய தயாராகவும் உள்ளோம். இந்த நிலையில் இருக்கும் நாம், நம்மை வேலைக்காரனாக மட்டுமே பார்க்கிறோம். நாம் வெறும் 8 மணி நேரம் மட்டுமே வேலைக்காரனாக இருக்கிறோம். மற்ற நேரத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம்.

இந்த நிலையில் இருந்து நாம் செய்யும் வேலைக்கு நாமே நுகர்வோராகும் நிலையை குறித்து யோசிக்க வைக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. எப்படி தாய் நாவல் ஒரு புரட்சிக்கு விதையாக அமைந்ததோ, அதேபோல் இந்தப்படம் நாம் செய்யும்
வேலையின் மாற்றத்தின் புரட்சிக்கு ஒரு சாம்பிளாக அமையும் என்று மோகன் ராஜா நம்புகிறார்.

பல குறிப்புகளை சேமித்து இந்த கதையை எழுதியுள்ளார் என்று படத்தில் தெரிகிறது. ஆனாலும் கதையின் முதல் பாதி சற்று அதிகமாக உள்ளது போல உணர்ந்தேன். பல உதவி இயக்குநர்கள், பல்வேறு நடிகர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களிடம் வேலைவாங்கி நல்ல வேலைக்காரன் என்ற பட்டத்தை வென்றுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

அடுத்த இடத்தை கலை இயக்குநர் முத்துராஜ் பெறுகிறார். மிக தத்ரூபமான செட்டுகளை
அமைத்துள்ளார். அடுத்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், இவர் அமைத்த பின்னணி இசைதான் ஒரு கட்டத்தில் படத்தை ஏற்றி நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி கதைக்கு தேவையானதை அழகாக கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ரூபன் , முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

கதாப்பாத்திரங்கள் என்று வந்தால் முதல் இடத்தை புடிக்கிறார் பகத் பாசில். தனது புத்திசாலித்தனம் கலந்த வில்லாதனத்தை மிக எதார்த்தமாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தனிஒருவன் படத்தில் வரும் சித்தார்த் அபிமன்யூ என்னும் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை நினைவூட்ட மறுக்கவில்லை.

சிவகார்த்திகேயன் பொதுவாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிப்பவர் என்று மக்கள் அவர்மீது வைத்திருந்த பார்வையை இந்தப்படத்தில் உடைத்துள்ளார். தன் அறிவு கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டு நடித்துள்ளார்.

நயன்தாரா தனக்கு கொடுத்த திரைப்பகுதியில் தனது சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்து கைதட்டல்களை பெறுகிறார். சினேகா தன் நடிப்பில் இத்தனை ஆண்டு காலம் தனக்கு கிடைத்த முதிர்ச்சியை முத்திரை பதிக்கிறார்.

இதையடுத்து பிரகாஷ்ராஜ், விஜய்வசந்த், சார்லீ, ரோகினி, R. J.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ் போன்ற அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை கதாபாத்திரத்திற்கு ஏற்ப கொடுத்துள்ளனர்.

இந்த மாதிரியான படைப்பினை உருவாக்க உறுதுணையாக இருந்த 24AM ஸ்டுடியோ நிறுவனத்தின் மேலாளர் திரு. R.D ராஜா அவர்களுக்கு பாராட்டுகள்.

தன் முதலாளிக்கு கொடுக்கும் விசுவாசத்தை வேலையில் செலுத்தி பார்க்க சொல்லும் முயற்சியே வேலைக்காரன் !

திங்கள், 18 டிசம்பர், 2017

மாயவன் திரைவிமர்சனம்

இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு எல்லையற்ற ஆசைகள் அவரவர் மனதில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இதை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் எந்த ஒருவகையிலாவது இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து விடமாட்டோமா என்ற எண்ணம்  மக்கள் மனதில் இருப்பது இன்றியமையாததே...

சொல்லபோனால் இந்த எண்ணம் இயற்கையானதே.. ஆனால் அதே சமயம் என்றாவது ஒருநாள் நாம் விண்ணுலகம் சென்றாக வேண்டும் என்பதும் இயற்கையானதே!

இதில் புரிதல்,உணர்தல் என்ற இருவகையான பிரிவில் மக்கள் உலவாடிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்துகொண்ட மனிதர்கள் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். உணர்ந்தவர்கள் அதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த இருவகைக்கும் அப்பாற்பட்ட ஒரு வகையும் உண்டு. இந்த இயற்கையை தன்வயம் எடுத்துக்கொள்ளுதல் (take over).
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அவ்வாறு ஒரு விஞ்ஞானி தன் வாழ்க்கையின் நினைவுகளை ஒரு hard disk-ல் பதித்துக்கொண்டு வேறு ஒருவரின் நினைவுகளை அழித்து அவன் வாழ்க்கையை வாழ்கிறான். இந்த மாயமான பின்னணியை உடைய மாயாஜால மனிதனை குறித்த கதைதான் மாயவன்.

இப்படிப்பட்ட சிந்தனை நம் தமிழ் சினமாவிற்கு புதுமையான முயற்சியே. இந்த மாதிரியான செயல்கள் சாத்தியமா?  இதுவும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது! இருந்தாலும், இந்த படமானது புதுவிதமான அமைப்பை கொண்டுள்ளது. முயற்சிகளை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

இந்த கதை மிகவும் எதிர்கால தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது என்று பலபேர்கள் சொல்வதை பார்த்தேன். இருக்கலாம், இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்தகாலத்தில் வாழும் மனிதர்களில் பாதிபேர் இந்த வகையான நினைப்புகளை கொண்டுள்ளார்கள் என்று தான் சொல்வேன்.

கதையானது, மிகவும் அவசியமான ஒரு கருத்தையே எடுத்துவைக்கிறது. சொன்னார் போல் எதிர்கால தன்மையைக் கொண்டு இருந்தாலும், சி.வி.குமார் நல்ல கதையே எழுதியுள்ளார்.ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் மனம் ஒற்றுப்போக மறுக்கிறது.

திரைக்கதை முதலில் புரியாத வண்ணம் ஆரம்பித்தாலும் 30 நிமிடங்களுக்கு பிறகு கதைக்குள் செல்வதை உணரமுடிகிறது. நலன் குமாரசாமி நல்ல ஆர்வமான திரைக்கதை அமைத்து இருந்தாலும், சில காட்சிகளுக்கு நியாயப்படுத்தாமல் போனது மக்களின் மனதை ஒருவகையான குழப்பத்திற்கு உள்ளாகிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் சில இடங்களில் பின்னணி இசையை அழகாகவே அமைத்துள்ளார். இருந்தாலும் , ஓரிரு பாடல்கள் இந்தவகையான படங்களுக்கு சுவாரிசியத்தை தடுக்கிறது. சில இடங்களில் பல வகையான தனிச்சிறப்புகளை உடைய இசையையும் செவிகள் கேட்க மறுக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இயக்குநரின் கற்பனையை கண்வழி காட்டுகிறார். படத்தொகுப்பு நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் சுருக்கமாகவும் கட் பண்ணியிருக்கலாம்.

ந்தீப் கிசன் தன் போலீஸ் கதாபாத்திரத்தை தக்க உணர்ச்சிகளுடன் வெளிப்படித்தியுள்ளார். இருந்தாலும் இன்னும் ஒப்பனையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஒட்டு மீசை கதையுடன் ஒட்டவில்லை. தவிர்த்து, சண்டை காட்சிகளில் உழைப்பு தெரிகிறது.

மற்ற கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை இந்த கதையின் தேவைக்கேற்ப கொடுத்துள்ளனர். இதில் டேனியல் பாலாஜி மற்றும் ஜாக்கி செராப் குறிப்பிடத்தக்கவர்கள்.

மொத்தத்தில், இந்த படைப்பு தமிழ் சினிமாவிற்கு வரவேற்புடையதே. கடைசியில் இந்த வகையான ஆராய்ச்சிகள் குறித்து காட்டுவது கதையை நியாயப்படுத்தியது.
மாயவன் ஒரு மாயாஜால மேடை !
                     - - - - × - - - - × - - - - × - - - -

சனி, 16 டிசம்பர், 2017

அருவி திரைவிமர்சனம்

Start camera, Rolling sir..... Action.

அருவி...யார் இந்த அருவி?

பொதுவாக பெற்றோருக்கு மகள் பிறந்தால் அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக அமையும் என்பார்கள். ஆம், அருவியும் அப்பாவின் செல்லப்பிள்ளையே. சுட்டித்தனமான பேச்சு, தைரியமான குணங்களைக் கொண்டு இந்த அக்கறையற்ற சமூகத்தில் வாழும் பெண் தான் அருவி.
முதலில் இந்த படத்திற்கு விமர்சனம் தேவையில்லை.. தேவையானது தரிசனமே!
கிடைத்துவிட்டது.. பார்த்துவிட்டேன். (மீண்டும் பார்ப்பேன்).

இந்த லௌகரிய வாழ்க்கையில் வாழ தேவையானது மனிதநேயமல்ல, பணமே என்ற இன்றய நிலையை எடுத்துறைப்பதே அருவி.
அருவியானது எவ்வாறு ஒரு இடத்தில் தோன்றி வளைந்து,ஓடி பல இன்னைல்களுக்கு உள்ளாகி கடைசியில் அணை போட்டு தடுத்தாலும் வந்து பிரமாண்டமாய் காட்சியளிக்கிறதோ.. அது போலவே இந்த அருவி கதாபாத்திரம் பல இன்னல்களை கடந்து வந்தே இருக்கிறது.

அதே நேரத்தில் அந்த அருவி சில நேரங்களில் பயமான தோற்றத்தையும் அளிக்க வாய்ப்புண்டு.அவ்வாறு அழகாக ஓடிக்கொண்டிருந்த பெண்ணின் வாழ்க்கையில் தீடீரென அசம்பாவிதம் நடந்த ஒரு இடத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது.

இந்த கதையை வெளிக்கொணரும் நோக்கம் எனக்கில்லை. என்றாலும், இந்த விமர்சனத்தில் படங்களில் உள்ள சில உணர்ச்சிகளை சொல்ல மேலோட்டமாக சொல்ல முயற்சிக்கிறேன்.

கதை ஆரம்பிக்கும் போது அருவி கதாப்பாத்திரத்தை குழந்தை காலம் முதல் கல்லூரி காலம் வரை 20 நிமிடங்கள் காண்பித்துள்ளார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். பொதுவாக ஒரு பெண் இவ்வளவு தைரியமாக உள்ளார் என்பது தீடீரென வராது. பிறந்ததில் இருந்து இந்த குணாதிசயங்கள் படிப்படியாக வளர்பவையே. எனவே, இந்த கால அவகாசம் தேவையே.

ஒவ்வொருவரையும் காவல் அதிகாரி விசாரிக்கும் போது அருவியின் ஒவ்வொரு பக்கம் தெரிகிறது. பொதுவாக வாழ்க்கையில் சுமார் 25 வயது வரை பெற்றோரை சார்ந்தே வாழவேண்டி உள்ளது. இது இயல்பான நிலையே. ஆனால் அருவி கல்லூரி காலத்தில் ஒரு சம்பவத்தால் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறாள்.

ஒரு பெண், அதுவும் படித்தப் பெண் சமூகத்தில் வாழ பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வருகிறாள். அவ்வாறு கடந்து வரும் பெண்மணி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள்.இது பல படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அருவி, இது விசித்திரமான கதைதான்.

இந்த படத்தில்  சமூகத்தில் நடக்கும் பல சம்பவங்களை அப்பட்டமாகவே காட்டியுள்ளனர்.உதாரணமாக, திருநங்கைகளின் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனங்களில் நடக்கும் வியாபாரம், தீண்டாமை போன்ற பல விசயங்கள் வெளிவருகிறது.

இந்த படத்தில் வேலை செய்த தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கி உள்ளார்கள் என்றே சொல்லலாம். படத்தின் முன்னணி, இசையே.. விவாதங்கள் நடக்கும் இடங்களில் கூட அழகாக பின்னணி இசையின் மூலம் கதைக்குள் கொண்டு போக செய்கிறார் இசையமைப்பாளரான பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பவராஜ். ஒளிப்பதிவாளர் Shelley Calist பல கருத்துக்களை காட்சிகளை அமைப்புகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும், கேமரா கிளார்டி கொஞ்சம் சுமாராக தான் இருந்தது. படத்தொகுப்பாளர் Raymond Derrick Crasta புதிய விதமான பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.நன்றாகவே வந்துள்ளது.

அடுத்ததாக படத்தின் மையமான அதிதி பாலன் (அருவி), இவர் தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா? வாழ்ந்தாரா? இல்லை ஒருவேளை இப்படி ஒரு பெண் இருந்தால் இப்படித்தான் இருக்குமா? என்ற பல சிந்தனைகளை எழ வைத்திருக்கிறார் அதிதி பாலன். கதைக்கு என்ன தேவையோ அதை எதார்த்தமாக நடித்துள்ளார். முதல் படம் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. இந்த படத்திற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. வாழ்த்துக்கள்...

கடைசியாக கப்பற்படை தலைவனான இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் துணை இயக்குநர் என்று தெரியவந்தது. ஆனால் அவர் உபயோகிக்கும் பக்கா கமர்ஷியல் கூறுகள் மிகவும் கம்மியாகவே உள்ளது. இன்று ஜனநாயகம் என்று சொல்லி கொள்ளக்கூடும் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை நன்றாக கூர்ந்து கவனித்து இந்த கதையை எழுதியிருக்கிறார். கருத்துக்கு நன்றிகள்..
AIDS (HIV) என்ற நோய் வெறும் நோய் மட்டுமே தீண்டாமை அன்று... உறவுகளை நேசியுங்கள். உறவாட யோசியுங்கள். மனது அருவியாகும்.
வாழ்க்கை மகிழ்வாகும்.
                                      - - - - - - × - - - - - × - - - - × - - - - - -

சத்யா திரைவிமர்சனம்

பொதுவாக திரில்லர் சஸ்பென்ஸ் என்ற வரிசையில் துருவங்கள் பதினாறு போன்ற சில படங்கள் தற்போது பிரபலமாகி வருகிறது.இந்த களத்தில் பல படங்கள் வந்தபோதிலும் அதில் சில படங்களே வெற்றியடைகிறது. அந்த வரிசையில் சத்யா தன் முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம்.

    ‎
இந்த திரைப்படம் தெலுங்கில் கடந்த வருடம் Kshanam என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக் படமாகும். ரீமேக் படம்தானே சுலபமாக எடுத்து விடலாம் என்று சிலர் எண்ணுவீர்கள்.ரீமேக் படம் என்றால் சுலபமல்ல அதில் நிறைய சிக்கல்கள் ஒழிந்துள்ளன. அதை நேர்த்தியாக எடுத்த இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.



படம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே கதைக்குள் சென்று விடுவது மற்ற படங்களில் தரும் சலிப்பை தவிர்த்தது.விறுவிறுப்பான கதையில் அவ்வப்போது முன்கதையில் வரும் காதல் பகுதி சற்று குறைத்து இருக்கலாம் என்றே தோன்றியது.


கதைக்கு பக்கபலமே ரியா கௌதம் என்ற பெண்ணை கடத்தியது யார்? எதற்காக? என்ற கேள்வி கடைசி வரும் தெரியாதிருக்கும் சஸ்பென்ஸ் தான்.
அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை அழகாக உள்வாங்கி வெளிக்காட்டி உள்ளார்கள். சிபி சத்யராஜ் அவரது காதலியின் தவிப்பை உணர்வது மற்றும் கடைசி காட்சியில் தன் உணர்வை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ரம்யா தன்னை உலகம் பைத்தியம் என்று எண்ணுவது தவிர தான் காதலனும் நம்புகிறான் என்ற தவிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் தனது கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்றே சொல்ல தோன்றுகிறது. சதீஷ் நகைச்சுவை கதாப்பாத்திரத்தை தாண்டி ஒரு ஆதரவான கதாபாத்திரத்தில் அமைப்பாக நடித்துள்ளார்.ஆனந்தராஜ் எப்போதும் போல சில இடத்தில் நகைச்சுவை கலந்த பயத்தை ஏற்படுத்துகிறார்.
தொழில்நுட்பம் என்று பார்க்கும் போது முதல் பாராட்டை வாங்க தகுதியடைவர் இசையமைப்பாளர் சீமான் கே கிங் . இவர் அமைத்த இசை சில இடங்களில் நம்மை படத்தின் உள்ளே சென்றடைய வைக்கிறது. ஒலிப்பதிவு,
சில இடங்களில் மிக துல்லியமாக அமைத்திருப்பதை உணரமுடிகிறது. ஒளிப்பதிவு கதைக்கு தேவை என்னவோ அதை திரையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. படத்தொகுப்பு நன்றாகவே இருந்தது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் படத்தை சுருக்கிருந்தால் இன்னும் மிருதுவாக இருந்திருக்கும்.
முடிவில் அந்த குழந்தையின் தன்மையை வெளிப்படுத்தும் விதம் அருமை.மொத்தத்தில், தன் காதலியை 7 வருடம் கழித்து தேடி வரும் நாயகன், அவளது குழந்தை கடத்தப்பட்டத்தை உணர்ந்து அவளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியே சத்யா..

Review

விண்மீனே..